செய்திகள்,வரலாறு,பண்பாடு

Friday 30 October 2015

சேனையூரும் வர்ண குல மரபும்

                 
சேனையூரும் வர்ண குல மரபும்
  பாலசுகுமார், முன்னாள் கலை கலாசார பீடாதிபதி,கிழக்குப்     பல்கலைக்கழகம்
                             
சேனையூரின்  மத்தியில் அமைந்திருக்கும் வர்ணகுலப் பிள்ளையார் ஆலயம்,ஒரு குல மரபின்  சாட்சியாய் தலை நிமிர்ந்து நிற்கிறது.மனித குல வரலாறு இன்று குல மரபுக் கதைகளுக்கும் இன வரை முறைகளுக்கும்,குடி வழி முறைமைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டு வருகிறது.வரலாறு குறித்த வரையறைகள் இன்று மாறியுள்ளன.பொதுமைப் படுத்தப் பட்டு எழுதப் பட்ட முறைமை மாறி குழுக்களின் வரலாறு வட்டார வரலாறு என வகைமைகள் மாறியுள்ளன.வட்டார வரலாறு முக்கியப் பட்டுள்ள இன்றய சூழலில் மானிடவியலாளர் பக்கவத்சலப் பாரதி இப்படி கூறுவார்.
''வட்டார வரலாறுஎன்பது குறிப்பிட்ட புவியியல் பரப்பு சார்ந்தபிராந்தியத்துக்கான வரலாற்றை குறிக்கும்.இதில் எண்ணற்ற வரலாற்று கூறுகள் அடங்கியுள்ளன.இத்தகய வரலாறு இடம் பற்றியதாக இருக்கலாம்,முக்கியத்துவம் கொண்ட ஆறு மலை குளம் பற்றியதாக அமையலாம்,அப்பிரந்தியத்தின் சமூகங்கள் பற்றியதாக இருக்கலாம்,சமூக நாயகர்கள் வரலாற்றில் இடம் பிடித்தவர்கள்,விடுதலை வீரர்கள், மதகுருமார்கள் பற்றியதாக அமையலாம்.கோயில் விழாக்கள் சாமிகள்,வழிபாட்டு மரபுகள்,வீர விளையாட்டுகள்பிற பண்பாட்டு நிகழ்வுகள் பற்றியதாகவும் இருக்கலாம்''
எல்லோரும் தங்கள் மூல வேர்களை தேடி அறிவதில் ஆவலாய் இருப்பர்.அதன் வழியே வர்ணகுலம் பற்றி அறிய முற்ப்பட்ட போது  ஆச்சரியத் தக்க தகவல்கள் கிடைத்தன.சேனையூரின் பிரதான குல மரபாக நாம் இனம் காண்பது வர்ண குல மரபே ஆகவே நாம் வர்ணகுல மரபின் மூலத்தை தேடிப் பயணிக்க வேண்டியவர்களாய் உள்ளோம்.
வர்ணகுலம் குருகுலம்,பரதவர்,கரையார்,பரவர்,பெளரவர்,கரவா,பரதர் என வரும் பெயர்கள் ஒரே குலத்தினரை குறிப்பதாகவே உள்ளது என பல்வேறு ஆரச்சியாளர்களின் முடிவாக உள்ளது   எம் .டி.ராகவன் போன்ற தொல்லியலாளர்கள்  இதனையே நிறுவுகின்றனர்.
வித்துவான்  சோ.க..இராமநாதபிள்ளை எழுதிய ''பரத வம்ச விலாசம்''  என்கிற நூல்  வற்ணகுலம் பற்றிய பல தகவல் களை இதிகாசங்களுடனும் புராணங்களுடனும் தொடர்பு படுத்தி சொல்கிறது
''பூர்வ காலத்தில் அஸ்தினாபுரியை ஆண்ட சந்தரவம்ச அரசர்களில் புரூருவன் என்பவரை முதல் தலைமுறையாகக் கொண்டு இருபதாவது தலைமுறையில் தோன்றிய துக்ஷ்யந்த ராஜனிடம் பரதன் என்ற அரசன் தோன்றினான்.
பாகவத புராணம் முதற்பகுதி அத்தியாயம் 21-ம் செய்யுளில், பரதனுக்கு இணையாக இறந்தகாலம், எதிர்காலம், நிகழ்காலம் என்ற முக்காலத்திலும் மனுநூல் ஆட்சிசெய்த மன்னர் எவருமில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே பரதனின் ஆட்சி காலத்திலிருந்து சந்திர வம்சமானது “ பரதவம்சம் ” என்றும், பரதனின் குலத்தவர் “ பரதவர் ” என்றும் அழைக்கப்படலாயினர்
உவின்சலன்துரை அகராதியில், “பரதவர் நெய்த நில மக்களாகிய மீன்பிடி குலத்தவர், பரதன் என்ற அரசனால் இந்தப் பெயர் வழங்கலாயிற்று,” என்று காணப்படுகிறது.
வீராமுனிவரின் சதுரகராதி, “ பரதவர் நெய்தல் நில மக்கள், ” என்று கூறுகிறது. இலங்கை சுமங்கல சுவாமிகள் இயற்றிய “ ஹித்தியாச வருணநாவ ” என்ற நூலில் பரதர் வம்சத்தினருக்குப் “ “ “ பரவர் ” என்னும் மற்றொரு பெயர் உண்டு என்றும், புதன் மகன் புரூருவனால் “ பெளரவர் ” என்றப் பெயர் பெற்று, வடமொழிச் சொல்லான “ பெளரவ ” என்பதின் தமிழ் வடிவமே “ பரவர் ” என்றும் கூறப்பட்டுள்ளது.
பரதரது பூர்வ சரித்திரம் பாரத இதிகாசத்தில் விஸ்தாரமாய் விவரிக்கப்பட்டுள்ளது. அவ்வம்சத்தின் பாரம்பரிய சரித்திரத்தின் சுருக்கமான வரலாறு கீழ்வருமாறு:
“ முதலில் சந்திரன் என்பவன் புதனைப் பெற்றான். புதன் புரூருவனைப் பெற்றான். புரூருவன் ஊர்வசியுடன் கூடி ஆயு என்பவனைப் பெற்றான். ஆயுவுக்கு நகுடன் பிறந்தான். இந்த நகுடன் அரசாண்ட போது பெற்ற மூன்று ஆண் மக்களில் மூத்த புதல்வன் யயாதி ஆட்சி உரிமை பெற்றான். இந்த யயாதி முதல் துக்ஷ்யந்தன் வரையுள்ள 11 தலைமுறை முறையே:
யயாதி – புரூருவன் – ஜனனேஜயன் – பிரசாவன் – சாயதி – சார்வபெளமன் – அரிசிகன் – மதிவான் – திடன் – நீலன் – துக்ஷ்யந்தன்.
துக்ஷ்யந்தன் மகாராஜனுக்குச் சகுந்தலையிடம் பரதன் பிறந்தான். பரதனின் மகன் பெளமன், இவன் மகன் சுகோத்திரன்; இவன் மகன் அஸ்தன். இந்த அரசனால் ஏற்பட்ட நகரத்துக்கு அஸ்தினாபுரம் என்று பெயர். இவனுக்கு நிகும்பன் பிறந்தான். அவனிடம் அரசமீளி பிறந்தான். அவனுக்கு வருணன் பிறந்தான். வருணனிடம் குரு உற்பவித்தான். இந்தக் குரு அரசனால் பரத வம்சத்தினர் “ கெளரவர் ” என்ற பெயர் பெற்றனர். இவன் யாகஞ் செய்த இடத்திற்கும், அரசாண்ட நாட்டிற்கும், குருக்ஷேத்திரம் என்ற பெயர் வந்தது.
குரு அரசனுக்கு பிரதீபனும், அவனிடம் பிறந்த தேவாபி, சந்தனு என்ற இரு மக்களில் மூத்தவன் தேவாபி காட்டில் தவம் செய்யச் சென்றதால், இளையவன் சந்தனு அரசாள உரிமைப் பெற்றான்.
சந்தனு அரசன் முதலில் கங்கை என்ற பெண்ணை மணந்து பீக்ஷ்மன் என்பவனைப் பெற்றான். பின்னர் பரதவம்சத்தின் திலகனாய் விளங்கிய தாசராஜன் புதல்வியும், வியாசரது தாயுமாகிய சத்தியவதியை மணந்து, சித்திராங்கதன் – சித்திரவீரியன் என்ற இரு புதல்வர்களைப் பெற்றான். சித்திராங்கதன் இளமையிலேயே இறந்ததால், சித்திரவீரியனுக்கு காசிராஜனின் இரு புதல்விகளையும் திருமணம் செய்விக்கப்பட்டு முடியுஞ் சூட்டப்பட்டது. இவன் மக்கட்பேறு இல்லாது இறக்கவே, இவனது மனைவிகளிடம் வியாசர் கூடி திருதராக்ஷடிரன் – பாண்டு என்று இரு புதல்வர்களைப் பெற்றார். திருதராக்ஷடிரனுக்கு துரியோதனன் முதலிய நூற்றுவர் பிள்ளைகளாவர். பாண்டுவுக்கு யுதிக்ஷ்டிரன் முதலிய வர் பிள்ளைகளாவர்.
இந்த நூற்றுவர் மற்றுமஅவர் காலத்தில்தான் மகாபாரத யுத்தம் நடந்தது. கூர்ச்சாத்து அரசனான கிருக்ஷ்ணன் பாண்டவர்கட்கு உதவி செய்ததால், பாண்டவரே யுத்தத்தில் வென்றனர்.
கிறிஸ்து பிறப்பதற்கு ஏறத்தாழ 4400 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றது தான் இந்த மகாபாரத யுத்தம். இதற்கு பிறகும் , சில காலம் பரத அரசாட்சி அஸ்தினாபுரத்தில் நிலைத்து வந்தது''
''மேற்கூறிய சந்திர வம்சத்தினரான பரதரும், மதுராபுரியை ஆண்டு வந்த பாண்டியரும் ஒரே வம்சத்தினர் என்று ,வில்லிபாரதம் கன்னபருவம் 17-ம் நாள் போர்புரிச் சுருக்கம் 106-ம் செய்யுளில் கூறப்பட்டுள்ளது
பரதரின் தலைநகரான அஸ்தினாபுரியிலிருந்து பாண்டுவின் புதல்வர்கள் வரில் அருச்சுனன் தீர்த்தயாத்திரை செய்தபோது, மதுக்கரை (மதுரை) க்கு அடுத்த பூழி என்ற மணலிபுரத்தை அடைந்து, அங்க ஆட்சி செய்த சித்திரவாகு பாண்டியனின் ஏக புதல்வியை கண்டு அவளை மணங்கொள்ள விரும்பினான். மன்னன் பாண்டியன் தன் மகள் வயிற்றில் பிறக்கும் குழந்தையை மதுரை அரசாட்சிக்கு உரியதாக்கும் பட்சத்தில், அருச்சுனன் விருப்பத்திற்கு உடன்பாடு தெரிவித்தான். அருச்சுனன் சித்திரவாகு பாண்டியன் மகள் சித்திராங்கதையை மணந்து, பப்புருவாகனன் என்ற மகனை பெற்றுப் பாண்டியனிடம் ஒப்படைத்து, மனைவி சித்திரங்காதையுடன் சென்றான்.”
கி.பி.1735-ம் ஆண்டு தரங்கம்பாடியில் அச்சிடப்பட்ட வேத அகராதியில், பூரு என்னும் அரசன் முதல் கூன் பாண்டியன் வரை மொத்தம் 364 பாண்டியர்கள் இருந்தார்கள் என்று கூறப்படுகிறது.
அருணாசலப் புராணம் வச்சிராங்கத பாண்டியன் சருக்கம் 411-ம் செய்யுளில் கூறப்பட்டது போல, பரத வம்சமும் பாண்டிய வம்சமும் ஒன்று என எவர்க்கும் நன்கு புலப்படும்.
காசி செட்டித்துரை எழுதிய கெஜற்றியர் என்ற ஆங்கில நூலிலும் இதுதான் கூறப்பட்டுள்ளது.
பரத குலத்தவர்க்கு உரிய கொடிகள் 211-ல் மீன் கொடியும் ஒன்று. பாண்டியனுக்கு உரிய கொடியும் மீன் கொடியாகையால், பரதவரே பாண்டியர் என்று அவர்களது துவஜம் (அதாவது, கொடி) சாட்சி பகருகின்றது.
நெய்தல் நிலத் தலைவனே கடற்சேர்ப்பன் என்றும், அவனே பாண்டியன் என்றும், அவனது குலத்தவரே பரதவர் என்றும் சூடாமணி நிகண்டு மக்கட் பெயர்த் தொகுதியிலும் , நாலடியார் – பழமொழி முதலிய சங்கச் செய்யுட்களிலும் கூறப்படுகின்றது.
வீரமாமுனிவர், வின்ஸ்லோ துரை இவர்களின் அகராதிகளில் , நெய்தல் நில மக்களைப் பரதர் என்று காணப்படுகின்றது. எனவே, பரத குலமே பாண்டிய குலமென மயக்கமின்றி தெளிவாகும்.
பரத வம்சத்தைப் பற்றிய மற்றொரு வரலாறு, பதினெட்டுப் புராணத்தில் ஒன்றான பிரமபுராணத்தின் மூன்றாவது காண்டத்தில் கூறப்பட்டுள்ளது. அது:
“சக்கரபுரிப் பட்டணத்தில் அரசாண்டு வந்த சுரா பாண்டியன் என்பவனின் புதல்வன் அமிர்தபாண்டியன். இவனுக்குப் பிறந்த ஏழு பிள்ளைகளில் மூத்தவன் காந்தவீரிய பாண்டியன். இந்த அரசன் தனது சகோதரர்களுடன் வேட்டையாட காட்டிற்குச் சென்றபோது களைப்புற்றதால், தனது தம்பியான குலசேகர பாண்டியனை தாகத்திற்கு தண்ணீர் கொண்டுவரப் பணித்தான். தண்ணீர் கொணர்வதில் கால தாமதஞ் செய்த தம்பிமீது சினங்கொண்டு, அவனை தங்களை விட்டு நீங்குமாறு கட்டளையிட்டான். அக்கட்டளையின்படி, குலசேகர பாண்டியன் தென் பகுதியில் மணவூர் என்னும் இடத்தில் உள்ள சமணராஜன் நகரில் மீன் பிடித்து விற்று ஜீவனம் செய்து வந்தான். இதையறிந்த சமணராஜன் தனது புதல்வி சுலோதையம்மாளை குலசேகர பாண்டியனுக்கு மணமுடித்து, ஆண் சந்ததியில்லாத தனது ராச்சியத்தையும் அவனுக்கே அளித்து ராஜபட்டம் சூட்டுவித்தான். குலசேகர பாண்டியன் மீன்பிடி தொழில் புரிந்தமையால், மீன்கொடி கட்டிச் சந்திர குலத்திற்கு அரசனாய் இருந்து, தனது வம்சத்திற்குரிய பாண்டியன் என்ற பெயர் பெற்று விளங்கினான்.”
மானிடவியல் அறிஞர் *எட்கர் தர்ஸ்டன்* அவர்கள் தான் எழுதிய *“தென்னிந்தியக் குலங்களும் குடிகளும்”* (”Castes and Tribes of South India”-(Edgar Thurston – 1909))என்ற ஆய்வு நூலில், *“பரவன்”* (Paravan) என்ற குலத்திற்குரிய மானுட வாழ்வின் பிறப்பு, இறப்பு, கல்வி, வழிபாட்டுச் சடங்குகள், திருமணம், ஆட்சியியல் நிலை ஆகியவற்றை நன்கு ஆராய்ந்து விளக்கியுள்ளார்.
சென்னைப் பல்கலைக்கழக நூலகக் குழுவின் தலைவரான எட்கர் தர்ஸ்டன், 1885-ல் சென்னை அருங்காட்சியகப் பொறுப்பாளராகவும் பணியாற்றினார். மேற்கூறிய நூலின் தமிழாக்கம் ,
தென் கிழக்குக் கடற்கரையைச் சார்ந்த “பரவர்”, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கடற்கரையில் உள்ள துறைமுகப் பட்டணங்களிலும் இலங்கையின் வடமேற்குக் கடற்கரை மாநிலங்களிலும் காணப்படுகின்றனர்.
பரவரின் தோற்றம் பற்றி வழங்கிவரும் வரலாறுகள், *சைமன் காசி செட்டி* எழுதிய *“பரவர்களின் தோற்றமும் வரலாறும்”* என்ற கட்டுரையில் (Origin and History of the Paravars by Simon Casie Chitty – 1873 Journal Roy.As.Soc.IV) கீழ் கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
1) 1735-ல் தரங்கம்பாடியில் அச்சிடப்பட்ட *“கிறிஸ்தவ திருச்சபையின் வரலாற்றின்“* ( The Historia Ecclesiastica) ஆசிரியர், பரவர்களை மறைநூல்களில் கூறப்பட்டுள்ள பர்வையம்கள் (Parvaim of the Scriptures) என்று வகைப்படுத்துகிறார். மேலும் பரவர்கள் , சாலமன் அரசர்(King Solomon) காலத்தில் கடற்பயணங்கள் மேற்கொள்வதில் புகழ் பெற்றவர்கள் என்றும் கூறுகிறார்.
2) பரவர்கள் தங்களை *அயோத்தி*யினைச் (Ayodhya) சேர்ந்தவர்கள் எனவும் , மகாபாரதப் போர் நிகழ்வதற்கு முன்னர் யமுனைக் கரையில் வாழ்ந்து வந்ததாகவும் கூறிக்கொள்வார்கள்.
3) பரவர்களிடையே அவர்களது தோற்றம் பற்றிய பல வரலாறுகள் புராணக் கதைகளோடு தொடர்புடையனவாக காணப்படுகிறது.
பரவர்கள் தங்களைக் கடல் தெய்வமான *வருணனின்* வழிவந்தவர்கள் எனக் கூறிக்கொள்வதோடு, சிவன் அசுரர்களை வெல்லப் போர்க்கடவுளான கார்த்திகேயனைப் படைத்தபொழுது சரவணப்பொய்கையிலிருந்து அவனுடன் கூடத் தோன்றிய கார்த்திகைப் பெண்களால் அவனைப் போலவே வளர்க்கப்பட்டவர்கள் என்றும் கூறிக்கொள்கிறார்கள். கடந்த யுகத்தின் முடிவில் உலகம் முழுவதும் நீரால் மூடப்பட்டு மூழ்கிய போது பரவர்கள் ஒரு தோணியினைக் கட்டியதாகவும், அதில் ஏறிக்கொண்டு பேரழிவிலிருந்து தப்பியதாகவும், பின்னர் நீர்வற்றி மீண்டும் நிலம் புலப்பட்டு தங்களது தோணி தரைதட்டியபோது, அந்த இடத்தில் குடியமர்ந்து அதற்கு *தோணிபுரம்* எனப் பெயரிட்டதாகவும் கூறப்படுகின்றன.
4) பரவர்கள் ஒரு காலத்தில் செல்வாக்கு உடையவர்களாகவும், கடற்பயணம் பற்றிய தங்களது அறிவின்காரணமாக மற்றச் சாதியர் மீது அதிகாரம் செலுத்துபவர்களாகவும் இருந்துள்ளனர். இவர்களுள் *“ஆதியரசன்”* என்ற பட்டப்பெயர் கொண்ட அரச வம்சம் இருந்துள்ளதாகவும், அதில் சிலர் *“மங்கை”* என்ற பெயருள்ள நகரிலிருந்து ஆண்டதாகவும், இந்நாளில் அது *“உத்தரகோசமங்கை”* என்ற பெயருடன் இராமநாதபுரம் அருகே விளங்குவதாகவும் கூறப்படுகின்றது.
5) *“வலைவீசு புராணம்”* என்ற புராணத்தில் பின்வரும் கதை கூறப்பட்டுள்ளது. சிவனின் மனைவி பார்வதியும் மகன் கார்த்திகேயனும் சொல்லக்கூடாத சில இரகசியங்களை வெளியிட்டதால் தேவலோகத்திலிருந்து வெளியேறும்படி பணிக்கப்பட்டனர். அவர்கள் பல மானிட பிறவிகள் எடுத்த பிறகே மீண்டும் தேவலோகத்தில் அனுமதிக்கப்படலாம் எனச் சாபம் பெற்றனர். பார்வதியின் வேண்டுகோளுக்கு இணங்கிய சிவன், அவர்கள் குற்றத்திற்கு தண்டனையாக ஒரு மானிட பிறவி மட்டும் எடுத்தால் போதுமானது என்று அவர்களுக்கான தண்டனையைக் குறைத்தார்.
இந்த வேளையில் பரவனின் அரசன் *திரியம்பகனும்* (Triambaka) அவனது மனைவி *வருணவள்ளியும்* (Varuna Valli) புத்திரப்பாக்கியத்திற்காக தவம் புரிந்து கொண்டிருந்த படியால், பார்வதி அவர்களுடைய மகளாகப் பிறந்து திரைசேர்மடந்தை (Tiryser Madente) என்று பெயரிடப்பட்டாள். கார்த்திகேயன் ஒரு மீனாக உருவெடுத்தான்.
வடகடலில் மீனாகத் திரிந்துகொண்டிருந்த கார்த்திகேயன், மிகப்பெரிய மீனாக வளர்ந்து தென் கடலுக்கு வந்து, பரவர்களின் மீன்பிடிக் கலங்களையெல்லாம் தாக்கி வந்தான். பரவர்களின் தொழில் சீரழிந்து வருவதை பரவர்களின் அரசன் *“திரியம்பகனன்”* , அந்த மீனைப் பிடிப்பவர்கள் யாராவது இருந்தால் அவர்களுக்குத் தனது மகளை மணம்முடித்துத் தருவதாக அறிக்கையிட்டார்.
அப்போது சிவன், ஒரு பரவனாக உருவெடுத்து அந்த மீனைப் பிடித்து, அரசனின் மகள் *“திரைசேர்மடந்தை”* என்ற பெயரில் உள்ள தனது மனைவியான பார்வதியை மணந்துகொண்டான்.
6) மகாபாரதத்தின் *“ஆதிபருவம்”* (Adiparva) என்ற பகுதியில் , பரவனின் அரசன் யமுனைக் கரையில் அரசாண்டதாகவும் ஒரு மீனின் வயிற்றிலிருந்து ஒரு பெண் குழந்தையைக் கண்டெடுத்ததாகவும் , அவளுக்கு “மச்சகந்தி” (Machchakindi) எனப் பெயரிட்டு தனது மகளாக வளர்த்ததாகவும், அவள் பருவம் அடைந்தபின் குலவழக்கப்படி பரவப் பெண்களோடு சேர்ந்து ஆற்றின் குறுக்கே பரிசலோட்டிப் பயணிகளை மறுகரை சேர்க்கும் பணியினை மேற்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஒருநாள் *“பராசர முனிவர்”* (Parasara Sage) பரிசல் துறையில் மச்சகந்தியை கண்டு காதல் கொள்ள, அவள் கறுவுற்று ஈன்ற குழந்தைதான் புராணங்கள் பலவற்றை இயற்றிய புகழ்பெற்ற *“வியாசர்”* (Viyasar)ஆவார். பின்னர் மச்சகந்தியின் அழகில் மோகங்கொண்ட சந்திர குல மன்னனான *“சந்தனு”* (King Santanu of Lunar Race) அவளை தன் மனைவியாக ஏற்று, பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் மூதாதையான *“விசித்திரவீரியனை”* (Vichitravirya) பெற்றெடுத்தாள். அஸ்தினாபுர அரசுக்கு உரிமை கொண்டாட நடத்தப்பட்ட பெரும் போரே மகாபாரத இதிகாசத்தின் மூலக் கருவாகும். இதனால்தான் பரவர்கள் தங்களைச் *“சந்திர குலத்தவர்”* என்று கூறிக்கொள்வார்கள். மேலும் தங்களது திருமண விருந்தினில் சந்திர குலச் சின்னங்களையும் கொடிகளையும் காட்சிப்பொருளாக ஏற்றி வைக்கின்றனர்
7) இலங்கையின் வடமேற்குக் கரையில் உள்ள *“குதிரைமலை”* (Kudremalle)யில் அரசாண்ட *“அல்லியரசாணி”* (Alliarasany) பற்றி நடத்தப்படும் நாடகத்தில் , பரவர்கள் ஒரு முதன்மைப் பாத்திரத்தில் பங்கெடுக்கின்றனர். கடற்கரையில் முத்தெடுக்க பரவர்களை அந்த அரசி பணியில் அமர்த்தியதாகவும், ஒவ்வொரு முத்துக்குளிப்பிலும் பத்துக்கலம் முத்தினை அரசிக்கு பரவர்கள் தரவேண்டும் என்ற விதிமுறை கொண்டிருந்ததாகவும் நாடகத்தில் கூறப்படுகின்றது.
8) *1871 சென்னை மாநிலக் கணக்கெடுப்பு அறிக்கை*யின் படி “பரவர்கள் மதுரை, திருநெல்வேலிக் கடற்கரைச் சார்ந்த மீனவர்கள் ஆவார்கள். இவர்கள் போர்த்துக்கீசியர் இந்தியாவிற்கு வந்தபோது முகமதியர்களின் அடக்கு முறையில் சிக்கித்தவித்தனர். இதனைக் கண்ட போர்த்துக்கீசியர் இவர்கள் கிறிஸ்த்தவர்களாக மதம் மாறினால் அவர்களுக்கு உதவுவதாகக் கூறியதால், அரசியல் நோக்கத்தின் அடிப்படையில் தென்கிழக்குக் கடற்கரையினைச் சேர்ந்தவர்களில் பலர் ரோமன கிறிஸ்த்தவர்களாக மதம்மாற காரணமானது.”
அதே அறிக்கையில், *திரு. எஸ். பி. றைஸ்* (S.P. Rice – Occasional Essays on Native South Indian Life, 1901) இந்த மீனவர்களைப் பற்றி கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
” தென் கோடியில் வாழும் இந்த மீனவர்கள் மிகவும் பக்தியுள்ள கத்தோலிக்கர்கள் ஆவார்கள். இவர்கள் தங்களது முன்னோர்கள் மதம் மாறிய போது அவர்களுக்கு வைக்கப்பட்ட போர்த்துக்கீசிய *“ஜோஸ்ப் பர்னான்டோ மற்றும் மரிய சந்தியாகு”* (Jose Fernandez and Maria Santiago)போன்ற பெயர்களை இன்றும் தாங்கியவர்களாக இருந்தாலும், நேரில் காணும்போது இடையில் கழுத்தில் கன்னி மேரியின் படங்கொண்ட உத்தரியம் அணிந்தவர்களாக காட்சியளித்து பழங்கால முறைப்படி மீன்பிடிக்கும் சாமானியர்கள், என்பது ஒப்புக் கொள்ளமுடியாத ஒரு செய்தியாகும்.”
9) *1901 சென்னை மாநிலக் கணக்கெடுப்பு அறிக்கை* (Madras Census Report 1901) பரவர்களைப் பற்றி கூறுவதாவது
” பரவன் என்ற பெயருக்குரியனவாக முறையே தமிழ், மலையாளம், கன்னடம் பேசும் மூன்று சாதிகள் உள்ளன. இந்த மூன்று பிரிவினருமே தமிழ் பேசும் *பரவன் அல்லது பரதவர்களின்* வழித்தோன்றல்களாக இருக்கலாம்.
*தமிழ் பரவர்கள்* கடற்கரையோர மீனவர்களாகும். இவர்களின் தலைமையிடம் தூத்துக்குடி. தலைவன் என்றொருவன் அவர்களை ஆட்சிப்புரிவான். இவர்களில் பெரும்பாலோர் பாரம்பரியக் கிறிஸ்த்தவர்கள். தங்களைப் பாண்டியர் குலத்தைச் சேர்ந்த *சத்திரியர்* எனக் கூறிக்கொள்ளும் இவர்கள் பிராமணர்கள் இல்லத்தில் மட்டுமே உணவு உண்பர்.
*மலையாளப் பரவர்கள்* கிளிஞ்சல் பொறுக்குதல், சுண்ணாம்புக் காளவாய் போடுதல், உடற்பயிற்சி ஆகியவற்றில் ஈடுபடுவார்கள்; இவர்கள் வீட்டுப் பெண்கள் மகப்பேறு பார்க்கும் மருத்துவச்சிகளாக இருப்பார்கள். இவர்களின் பட்டப்பெயர்கள் *குருப்பு, வாரக்குருப்பு, நூறன் குருப்பு* (Kurup, Varakurup, Nurankurup)ஆகியவனாகும்.
*கன்னடப் பரவர்கள்* குடைகட்டிகளாகத் தொழில் செய்வதோடு பூத ஆட்டக்காரர்களாகவும் விளங்குகின்றனர்.
மேலும் மேற்குக் கடற்கரையில் வாழும் பரவர்கள், முகமதியரின் கொடுமைகளிலிருந்து தப்பிக்க திருநெல்வேலியிலிருந்து வந்தவர்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
10) *மன்னார் வளைகுடாவில் இந்தியர்கள் முத்துக்குளித்தல் தொடர்பான அறிக்கையில்* (Report of the Indian Pearl Fisheries in the gulf of manner 1905) திரு. ஜெ. ஹெர்னெல்(J.Hornell), மன்னார் வளைகுடாவின் இந்தியக் கடற்கரை சார்ந்து வாழ்கின்ற பரவர்களின் வரலாறு பற்றியும், முத்துக்குளித்தலோடு அவர்கள் கொண்ட தொடர்பு பற்றியும் பல தகவல்களை தந்துள்ளார். அவை:
“ முத்துக்குளிக்கும் தொழில் நினைவுக்கு எட்டாத காலந்தொட்டு, பரவர்கள் கட்டுப்பாட்டில் இருந்து வருவதாக வழக்குவரலாறு தெரிவிக்கின்றது. கி.மு. முதல் ஆண்டுகள் தொடர்ந்து மதுரை,திருநெல்வேலி மாவட்டங்கள் என்று இன்று வழங்கப்படும் பகுதி தமிழர்களுக்குரிய பாண்டியப் பேரரசாக இருந்து வந்திருக்கின்றது என்பது தெரிந்த செய்தியாகும். பழைய தமிழ் நூலான *‘கல்வேடு’* (kalvedu) என்ற நூலில், பாண்டிய மன்னனுக்கும் முத்துக்குளிக்கும் பரவர்களுக்கும் இடையேயான உறவு பற்றிய குறிப்பு கீழ்க்கண்டவாறு காணப்படுகின்றது
*வேதநாராயணன் செட்டியும்* (VidanarayanenCheddi) முத்துக்குளிக்கும் பரவர்களும் மதுரையை ஆண்டுவந்த *பாண்டியன்* மகளான *அல்லியரசாணிக்கு* (Alliyarasani) கப்பம் செலுத்தி வந்தனர். அவள் கடலில் பயணம்போன போது அவர்களது கப்பல் புயலில் அகப்பட்டு, இலங்கையின் கரையில் ஒதுங்க, அங்கு அவர்கள் *கரைநேர்கை, குதிரைமலை* (Karainerkai and Kutiraimalai) ஆகிய இடங்களைக் கண்டனர். வேதநாராயணன் செட்டி தனது கப்பலில் இருந்த செல்வம் முழுவதையும் அங்கேகொண்டு சேர்க்க பரவர் உதவியை நாடினார்.கடலிகிலபம்,கல்லக்கிலபம்(Kadalihilapam,Kallachihilapam) ஆகிய துறைகளில் பரவர்கள் முத்துக்குளிக்க ஏற்பாடுகள் செய்வதோடு, இரும்பைப் பொன்னாக்கும் இரசவாதத்திற்கு உதவும் மரங்களையும் அங்கிருந்து கொண்டுவந்தான்
கொற்கையில்(Korkai) பரவர்கள் மிகுந்த செல்வாக்கு உடையவர்களாக விளங்கினர் என்று மதுரைக்காஞ்சி(Madurai Kanchi) தெரிவிக்கின்றது. மீனை உணவாகக் கொள்ளும் பரவர்கள் வில்லையேந்தி கூட்டமாகத் திரிந்து, பகைவர்களைத் தங்களுடைய புறங்காட்டாத வீரச்செயல்களால் அச்சுறுத்தி வந்தனர். பரவர் நாட்டின் முக்கியப் பட்டணம் கொற்கை என்றும், அங்கு முத்துக்குளிப்பவர்களும் சங்கு அறுப்பவர்களுமே பெறும் அளவில் வாழ்கின்றனர் என்றும் , மதுரைக்காஞ்சி தெரிவிக்கின்றது
பாண்டியர் அரசு வலிமைவாய்ந்ததாக இருந்த காலத்தில், பரவர்கள் அரசரிடமிருந்து பாதுகாப்பினையும் வரிவிலக்கினையும் பெற்று வந்தனர்.”
மேற்கூறியன அனைத்தும் பரவர்களின் தோற்றம் பற்றி வழங்கி வரும் பதிவுகளாகும் ஆகும். இவை ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக இருந்தாலும்  வர்ணகுலம் பற்றிய தொன்மையயையும் அதன் தொடர்ச்சியயையும் நமக்கு உணர்த்தி நிற்கிறது.
வர்ணகுலம் வர்ணகுலத்தான் குருகுலத்தான் எனவரும் தொடர்களும் மீகமன் பற்றிய குறிப்புகளும்வெடியரசன் பற்றிய நம்பிக்கைகளும் இம் மரபினரின் தொடர்ச்சியான இருப்பையும்நீட்சியயயும் வலியுறுத்துகின்றன.சிலப்பதிகாரத்தின் வழிவந்த ‘’கண்ணகி வழக்குரை’’ காவியம் மீகாமன் பற்றிய செய்திகளை தருகிறது.கண்ணகியின் காற்சிலம்பில் பதிக்க கூடிய நாகமணியயை தென் திசையில்தென் திசையில் உள்ள நாகத்தீவிலிருந்து கொண்டு வரக் கூடியவன் மீகாமனே என சொல்கிறது.
        ‘’கூட்டி வந்தார் வருணர் தமை குறையறுத்து கரை நீளும்
         வாட்டமற வைத்த நாளின்  வளங்கிய பேர் கரையார் காண்
          பாட்டிலவர் தம் பெருமை பகரவினித் தொலையாது
           மீட்டு புகழ் மீகாமன்சிறந்த மரபென உரைத்தார்’’
இது போலவே பரதர் குலத் தெருவில் வசித்து வந்தமீகாமனை அழைத்து வந்த செய்தியில்
        ‘’எல்லையிலா புகழ் பரதர் இருக்குமந்த தெரு புகுந்து
            மல்லையொத்த புயத்தானே வர்ணகுலத்துதித்தோனே''  
என மீகாமனின் வீரத்தை குறிப்பிடுகிறது.
கண்ணகி குளிர்த்தியில்
       ‘’மீகாமனுக்கு மிகுந்த வரம் கொடுத்து
        நாகமணி வாங்கவெண்று நயந்தாய் குளிர்ந்தருள்வாய்’’'
என வரும் வரிகளும் மீகாமன் பற்றிய செய்தியயை நமக்கு தருகிறது.
திருகோணமலியின் வரலாற்றையும் வளமைகளையும் கூறும் கோணேசர் கல்வெட்டு கொட்டியாரத்தில் கோணேசர் ஆலயத்துக்காக கொடுக்கப் படும் பொருட்கள் கெவுளிமுனையிலுள்ள மீகாமனிடம் சேர்ப்பிகப் படவேண்டும் எனக் குறிப்பிடப்பிடுகிறது இங்கு மீகாமன் ஒரு தலைவனாக காட்டப் படுவதை காணலாம்.
கோணெசர் கல் வெட்டு வேறு ஒரு தகவலையும் நமக்கு தருகிறது  கொட்டியாரத்தில் கூட்டப்பட்ட தேசத்தார் கூட்டத்தில் ஏழூர் அடப்பன் பற்றிய குறிப்பு வருகிறது. அடப்பன் அடப்ப்னார் என்ற பெயர்கள் ஒல்லாந்தர் கால குறிப்புகளின் படி குருகுலத்தவருக்குரிய தலைமைக் காரரின் பெயர்  என விளங்கிக் கொள்ள முடிகிறது.இப்படிப் பார்க்கும் போது கோணெசர் கல்வெட்டு கூறும் காலப் பகுதியில் கொட்டியாரத்தின் ஏழு ஊர்கள் குருகுலத்தவர்களுக்கு உரியதாக இருந்திருக்கிறது என புலனாகிறது.
‘’முக்கறு கற்றன’’ எனும் சிங்கள ஏட்டுச் சுவடீப்படியொரு குறிப்பை தருகிறது.’’7740 வீரர்கள் கொண்டகரவ சேனை கொர மண்டலம் என அழைக்கப் படும்காஞ்சிபுரம் ,காவிரிப் பூம் பட்டினம்,கீழைக் கரைஆகிய குருகுலப் பிரதேசங்களிலிருந்து வந்ததையும்,முக்குவரையும் துலுக்கரையும் போராடி வென்றனர் என்பதயும்விபரிக்கிறது.கோட்டை இராசதானியின் 6ம் பராக்கிரம பாகுவே(1412-1467)இவர்களை அழைத்தான் என்றுமவர்களுக்கு பல வீதிகளையும் வசிப்பிடங்களையும் 18துறைமுகங்களையும் வரியின்றி கொடுத்தான் என பிறிற்றோவின் யாழ்ப்ப்பாண சரித்திரம் கூறுகிறது’’
சோழப் பேரரசன் இராசேந்திர சோழன் இலங்கை மீதான படையெடுப்பை கூறும் திருமுருக கூடல் கல் வெட்டில்சிங்கள இராணுவத்தின் வீழ்ச்சியயயுமதில் தங்க கால்வளை அணிந்த குருகுலத்தராயன் வீழ்ந்து மடிந்ததும் கூறப் பட்டுள்ளது.
குருகுல மக்கள் வீரம் செறிந்தவர்களாகவும்போர்த்திறன் மிக்கவர்களாகவும் இருந்தமைக்கான சான்றுகள்பரவிக் கிடக்கின்றன வர்ணகுலத்தவர் பற்றிய புராணக்கதையொன்று  “ஜலப் பிரளயம் ஏற்பட்டு உலகம் அழிந்து நீரால் நிறைந்த போது மீகாமன் தோணி மட்டுமே வெள்ளத்தில் மிதந்ததாகவும் சிவபெருமானும் வெள்ளத்தில் தத்தளிக்க சிவன் தன்னை ஓடத்தில் ஏற்றும் படி கேட்க சிவனை கைதூக்கி விடாமல் வள்ளத்தை ஒருக்கணித்து ஏற இடமளித்த போது “உள்ளமும் கரயான் உகத்திலும் கரையான்’’ என கூறியதாக  இப்படி சொல்கிறது.
வர்ணகுலத்தாரின் கொடி மகரம்  மகரக் கொடி. மகரம் என்பது யானையின் தந்தத்தையும் சிங்கத்தின் கால்களையும்,பன்றியின் காதையும்,மீனின் உடலையும்,வெளித்தெரியும் பற்களையும்,குரங்கின் கண்களையும் அழகான தோகையயையும் கொண்ட கடற் பிராணியாகும்.அது பிரபஞ்சம் தழுவிய குறியீடாக அடையாளப் படுத்தப் படுகிறது.
வட இந்தியாவின் குருகுல வம்சத்தோடுஉறவு கொண்ட  பாண்டிய அரசர்கள் மகரத்தை தமது அடையாள சின்னமாக கொண்டனர் என நம்பப் படுகிறது.மகரம் எங்கள் குருகுல வம்சத்தின் அடையாளம் என வலைவீசு புராணம் சொல்கிறது.
கெறாஸ் அடிகளாரின் ஒரு கூற்றையும் கவனத்தில் கொள்ளலாம்"மொகஞ்சதாரோ களி மண் முத்திரையில் காணப்படும் மீன்களும் சந்திரனும் அவர்களது மூதாதயரான பாண்டிய மன்னனையும்கரையோரப் பரவ மக்களையும்குறிப்பதாகுமங்கு காணப்படும் எட்டு நட்சத்திர அடையாளங்களுள் நண்டு இரு சோடி மீன்கள்,மகரம் ஆகியன இடம் பெறுகின்றன.''
திருகோணமலை கோட்டை வாசலில் பொறிக்கப் பட்டுள்ள மீன் லச்சினைகளையும் இதனுடன் பொருத்திப் பார்க்கமுடியும்
இன்றும் சேனையூர் மக்களின் வம்சக் கொடியாக மகரமே பயன் பாட்டில் உள்ளது.  மாடுகளுக்கு சுடப்படும் குறி அடயாளமாக மகரமும் ஈர்க்கிலையும் பொறிக்கப் படுகிறது.மரண வீட்டில் செய்யப் படும் தேரில் மகரக்  கொடியே பறக்க விடப் படுகிறது .
திருகோனமலை மாவட்டத்தில் தென்னமரவாடி,திரியாய்,குச்சவெளி,கும்புறுபிட்டி,நிலாவெளி,சாம்பல்தீவு,சல்லி,தம்பலகாமம் ,கந்தளாய்,ஆலங்கேணி,திருகோனமலை நகரும் நகரை அண்டிய சூழலும்,மூதூர்,சேனையூர்,கட்டைபறிச்சான்,கடற்கரைச்சேனை,கெவுளிமுனை,சூடைக்குடாஆகிய இடங்களில் வர்ண குல மரபினரின் படர்ச்சி காணப் படுகிறது.
எங்கோ தொடங்கிய ஒரு வேர் சேனையூர் வரை தொடர்கிறது.கிழக்கு மாகாணத்தில் தென்னமரவாடி தொடக்கம் திருக் கோவில் வரை வர்ணகுல மரபும்  மீகாம பரம்பரை தொடர்ச்சியும் நீண்டு செல்கிறது.
  பலநூல்கலிலிருந்து பெறப் பட்ட தகவல்களையும் என் மூதாதயர் வழி வந்த குறிப்புகளையும்  இணைத்து இந்த கட்டுரை எழுதப் பட்டுள்ளது.ஒரு குல மரபின் தொடர்ச்சியென்பது  வரலாற்றின் வழியே வருகிரது என்பது நிருபணமாகிறது..

No comments:

Post a Comment